கடந்த மாதம் இரண்டு நாட்கள் தமிழகம் முழுக்க நீதிமன்றப் புறக்கணிப்பு நடந்தது. இந்த நீதிமன்றப் புறக்கணிப்புக்கான காரணங்கள், பின்புலம் ஆகியவற்றைப் பற்றி சவுக்கு தளத்தில் கருப்பு ஆடுகள் என்ற கட்டுரையில் விரிவாக எழுதப்பட்டிருந்தது.
அந்த நீதிமன்றப் புறக்கணிப்பு நடந்து முடிந்து ஒரு சில நாட்களிலேயே மீண்டும் ஒரு கருப்பு ஆடுகள் கட்டுரையை எழுத வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கறிஞர்களில் பெரும்பாலான நியாய உணர்வு படைத்தவர்கள், கருப்பு ஆடுகள் கட்டுரையை வரவேற்றாலும், சில வழக்கறிஞர்கள், “எப்படி எங்களைப் பற்றி இப்படி எழுதப்போயிற்று” என்று வருத்தப்பட்டதோடு அல்லாமல் கடிந்து கொண்டனர். கடந்த வாரம் கும்பகோணத்தில் நடந்த சம்பவம் குறித்து எழுதாமல் எப்படி இருப்பது ?
கும்பகோணம் உமையாள்புரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் 4 மே அன்று இறந்து விடுகிறார். அவருடைய இறப்புச் சான்றிதழ் வேண்டி, மணிகண்டனின் மனைவி மல்லிகா கும்பகோணம் நகராட்சியில் விண்ணப்பிக்கிறார். விண்ணப்பக்கட்டணம் ரூபாய்.5/-. அந்தக் கட்டணத்தை செலுத்துகிறார் மல்லிகா. ஒரு சில வாரம் கழித்து, அந்த இறப்புச் சான்றிதழை வாங்கி வரும்படி, இறந்த மணிகண்டனின் மனைவி புண்ணியமூர்த்தியிடம் தெரிவித்ததும், அவர் தஞ்சை மாவட்டம் கபிஸ்தலத்தைச் சேர்ந்த பாலாஜி என்ற வழக்கறிஞரை அழைத்துக் கொண்டு முனிசிபாலிட்டி அலுவலகம் செல்கிறார்.
பொதுவாக பொதுமக்கள் நேரில் செல்வதை விட, வழக்கறிஞர்களை அனுப்புவதற்கான காரணம், வழக்கறிஞர்கள் படித்தவர்கள், சட்ட நுணுக்கம் அறிந்தவர்கள்… அவர்களை ஏமாற்ற முடியாது… நாம் நேரில் சென்றால் ஏமாற்றி விடுவார்கள்… என்பதாலேயே. இந்த அடிப்படையில் வழக்கறிஞர் பாலாஜியை அழைததுக் கொண்டு முனிசிபாலிட்டி அலுவலகம் செல்கிறார் புண்ணியகோடி.
வழக்கறிஞர் பாலாஜி, முனிசிபாலிட்டி அலுவலகத்தில் இருந்த மணிகண்டன் என்ற எழுத்தரிடம் இறப்புச் சான்றிதழ் வழங்குமாறு கேட்கிறார். அந்த எழுத்தர், இறப்புச் சான்றிதழுக்கான கட்டணமாக ரூபாய் 7 கட்டும்படி கூறுகிறார். வந்ததே கோபம் பாலாஜிக்கு…. யாரை ஏமாற்றப் பார்க்கிறாய்… ஏற்கனவே 5 ரூபாய் கட்டியாகி விட்டது…. ஏமாற்றப் பார்க்கிறாயா.. மரியாதையாக சான்றிதழைக் கொடு…. என்று ஏகவசனத்தில் பேசுகிறார். அந்த எழுத்தர், சார் சான்றிதழின் கட்டணம் 7 ரூபாய். இது அரசு விதித்துள்ள கட்டணம், இது எனக்கானது அல்ல என்கிறார்…. அரசு ஊழியர்கள் அனைவருமே திருட்டுப்பயல்கள்… என்று கத்த ஆரம்பிக்கிறார். அந்த இடத்தில் மற்ற ஊழியர்கள் கூடுகிறார்கள். அனைவரும் சேர்ந்து, 7 ரூபாய் கட்டினால்தான் சான்றிதழ் வழங்க முடியும் என்று கூறுகிறார்கள். “நான் யாரென்று தெரியாமல் மோதுகிறீர்கள்… வழக்கறிஞரிடமே உங்கள் வேலையைக் காட்டுகிறீர்களா.. எப்படி சான்றிதழ் வாங்குவது என்று எனக்குத் தெரியும்” என்று சத்தம் போட்டு விட்டுப் போய் விடுகிறார் பாலாஜி.
மறுநாள் நான் தனி மரம் அல்ல…. தோப்பு என்ற பன்ச் டயலாக்குக்கு ஏற்றபடி, செந்தில் குமார், ராஜ்குமார், பிரபாகரன் ஆகிய வழக்கறிஞர்களோடு வருகிறார் வழக்கறிஞர் பாலாஜி. வந்ததும், முதல் நாளை விட உரத்த குரலில் எங்கே சான்றிதழ் என்று கேட்டுள்ளார். நேற்றே வந்து தகராறு செய்த நபர் என்று தெரிந்த ஊழியர்கள், 7 ரூபாய் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர். தர முடியாது என்று பாலாஜி கூறியதும் வாய்த்தகராறு நடக்கிறது. அப்போது முத்துராஜ் என்ற ஒரு கம்ப்யூட்டர் ப்ரோக்ராமர், தலையிட்டு சமாதானப்படுத்த முயல்கிறார். “நீ என்னடா வக்காலத்து வாங்கறது” அவரைப் பிடித்து கீழே தள்ளுகின்றனர் வழக்கறிஞர்கள். உடனே மற்ற ஊழியர்கள் ஒன்று சேர்ந்து வழக்கறிஞர்களோடு சண்டையிட வருகின்றனர். அப்போது ஒரு வழக்கறிஞர் அங்கே இருந்த கண்ணாடி கதவை ஓங்கி அடிக்கிறார். அடித்ததும் கண்ணாடி உடைகிறது. அப்படி அடித்ததில் அந்த வழக்கறிஞருக்கு கையில் ரத்த காயம் ஏற்படுகிறது. அவராகவே கண்ணாடியை அடித்து காயம் ஏற்படுத்திக் கொண்ட அந்த வழக்கறிஞர் உடனே தனது சக வழக்கறிஞர்களுக்கு தொலைபேசி மூலம், கும்பகோணம் முனிசிப்பாலிட்டி அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதாக தெரிவிக்கிறார்.
கண்ணாடியை உடைத்த மாவீரன்
இதையடுத்து 40க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் அங்கே வருகை தருகிறார்கள். அவர்கள் வந்ததும், காவல்துறையினர் கேட்டை இழுத்துப் பூட்டுகிறார்கள். கேட்டுக்கு இந்தப் பக்கம் முனிசிப்பாலிட்டி ஊழியர்கள். அந்தப் பக்கம் வழக்கறிஞர்கள். இரு தரப்பும் சராமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொள்கிறார்கள். இந்தக் கல்வீச்சில் 5 வழக்கறிஞர்கள், 1 காவலர் மற்றும் 13 முனிசிப்பாலிட்டி ஊழியர்கள் காயமடைகிறார்கள். வெளியே நின்றிருந்த வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. லாரி ஒன்றின் கண்ணாடி உடைக்கப்படுகிறது.
அவ்வளவுதான்… பொறுக்குமா வழக்கறிஞர் சமூகம்… வெற்றி வேல்….. வீரவேல்… என்று களத்தில் இறங்குகிறார்கள். நீதிமன்றப் புறக்கணிப்பு அறிவிக்கிறார்கள். நீதிமன்றத்தை இழுத்துப் பூட்டுகிறார்கள். கும்பகோணம் வழக்கறிஞர் சங்கத்தின் துணைத் தலைவர் குமாரவேலின் தலைமையில் போராட்டம். இரவு முழுவதும் நீதிமன்றத்திலேயே தங்குகிறார்கள். உள்ளிருப்புப் போராட்டமாம். காலையிலும் போராட்டம் தொடர்கிறது. யாரும் உள்ளே போகக் கூடாது என்று அனைத்து வாயில்களையும் அடைக்கிறார்கள். காலை வேலைக்கு வருகை தந்த ஊழியர்கள், ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். தலைமைக் குற்றவியல் நடுவர் வேங்கடவரதன் வருகிறார். போராடும் வழக்கறிஞர்களோடு பேச்சுவார்த்தை நடத்துகிறார்… “ப்ளீஸ்…. நீதிமன்ற ஊழியர்களை மட்டுமாவது உள்ளே அனுமதியுங்கள்” என்று கேட்கிறார். சரி… சரி போனால் போகிறது… என்று நீதிமன்ற ஊழியர்களை மட்டும் உள்ளே அனுமதிக்கிறார்கள்.
வெற்றி வேல்.... வீர வேல்...
அன்று ஆர்ப்பாட்டம் நடத்திய வழக்கறிஞர்கள், அனைத்து முனிசிப்பாலிட்டி ஊழியர்களும் கைது செய்யப்படும் வரை காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்பு நடத்துவது என்று முடிவு செய்கிறார்கள். தஞ்சை மாவட்ட தலைமை நீதிபதி சேதுமாதவன் ஓடோடி வருகிறார். வழக்கறிஞர்களிடம் மன்றாடுகிறார். நான் காவல்துறையோடு பேசி, சம்பந்தப்பட்ட அனைத்து முனிசிப்பாலிட்டி ஊழியர்களையும் கைது செய்ய வைக்கிறேன் என்கிறார். சரி.. திங்கட்கிழமை மட்டும் நீதிமன்றப் புறக்கணிப்பு என்று அறிவிக்கிறார்கள் வழக்கறிஞர்கள்.
இதன் நடுவே தாக்கப்பட்ட சகோதரர்களுக்கு ஆதரவாக, கும்பகோணம் முனிசிப்பாலிட்டியின் துப்புறவுப் பணியாளர்கள் வேலை நிறுத்தம் அறிவிக்கிறார்கள். முனிசிப்பல் சேர்மேன் ரத்ன சேகர் தலையிட்டு அவர்களை வேலைக்குத் திரும்ப வைக்கிறார். கும்பகோணம் முனிசிப்பாலிட்டியின் அனைத்து ஊழியர்களும், கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுகிறார்கள்.
இதன் நடுவே முதல் நாள் ஏற்பட்ட வன்முறைக்காக, கம்ப்யூட்டர் ப்ரோக்ராமர் முத்துராஜிடம் ஒரு புகாரைப் பெற்று பாலாஜி மற்றும் 20 வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு செய்கிறது காவல்துறை. வழக்கறிஞர்கள் கொடுத்த புகாரின் பேரில் முனிசிப்பாலிட்டி ஊழியர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இரண்டையும் விசாரித்த காவல்துறையினர், சனிக்கிழமை அன்று இரவு, வழக்கறிஞர் பாலாஜியை கைது செய்வது என்ற முடிவுக்கு வருகின்றனர். இந்த பாலாஜி மீது பந்தாநல்லூர் மற்றும் திருப்பனந்தாள் ஆகிய காவல் நிலையங்களில் ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரச்சினைக்கு முக்கிய காரணமாக பாலாஜி இருப்பதால் அவரை கைது செய்யலாம் என்று முடிவெடுத்த காவல்துறையினர் அவரைத் தேடி, அவர் ஊருக்குச் செல்கின்றனர். அங்கே ஒரு பொதுக்கூட்டத்தில் நின்று கொண்டிருந்த பாலாஜி, காவல்துறையினரைப் பார்த்ததும் ஓட்டமெடுக்கிறார். அவர் ஒரு காம்பவுன்ட் சுவரில் ஏறி குதிக்கையில் அவருக்கு காலில் லேசான காயம் ஏற்படுகிறது. போலீசாரும் அவரைத் துரத்திப் பிடிக்கின்றனர். கைது செய்யப்பட்ட பாலாஜியை ஸ்வாமி மலை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், சனிக்கிழமை இரவு, நீதித்துறை நடுவர் சந்திரசேகரன் வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றனர். சந்திரசேகரன் என்ன இது நள்ளிரவில் கொண்டு வந்திருக்கிறீர்களே… இப்போது ரிமாண்ட் செய்ய முடியாது… விடிந்ததும் கொண்டு வாருங்கள் என்கிறார். சரி என்று மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பாலாஜியை அழைத்துச் செல்கின்றனர்.
காயம் பட்டு சிகிச்சை பெறும் காவலர்
காயம்பட்டு சிகிச்சை பெறும் முனிசிப்பாலிட்டி ஊழியர்கள்
பாலாஜியை உடனே ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று வாதாடுகிறார் வழக்கறிஞர். அரசு வழக்கறிஞர் விடுவிக்கக் கூடாது என்று கூறுகிறார். நீதித்துறை நடுவர், பாலாஜியை உடனே தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அந்தக் கல்லூரியின் டீனிடம் சான்றிதழ் பெற்று வாருங்கள் என்கிறார். காவல்துறையினரும் வேறு வழியின்றி, ஞாயிற்றுக் கிழமை டீனை கண்டுபிடித்து, சான்றிதழ் பெற்று வருகின்றனர்.
பாலாஜியை சிறையில் அடைக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு நீதிபதியிடம் கோரியதும், அவர் 15 நாட்கள் சிறை, ஆனால் 15 நாட்களும், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பாலாஜி இருப்பார் என்று உத்தரவிடுகிறார். அரசு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்ததும், சரி என்று வேறு வழியின்றி, 15 நாட்கள் சிறையில் அடைக்குமாறு உத்தரவிடுகிறார். பாலாஜி திருச்சி சிறையில் அடைக்கப்படுகிறார்.
மறுநாள் திங்கட்கிழமை நீதிமன்றப் புறக்கணிப்பு. அனைத்து வழக்கறிஞர்களும், மாவட்ட நீதிமன்றத்தில் குழுமுகின்றனர். நீதிமன்ற நடைமுறைகள் தெரிந்தவர்களுக்குத் தெரியும். ஜாமீன் மனு இன்று தாக்கல் செய்தால், மறுநாள்தான் விசாரணைக்கு வரும். திங்கட்கிழமை மதியம் 12 மணிக்கு மாவட்ட நீதிபதி சேதுமாதவன் முன்பு ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படுகிறது. இது போல ஜாமீன் மனு தாக்கல் செய்திருக்கிறோம் என்று சொன்னதும், மதியம் 2 மணிக்கு விசாரிக்கிறேன் என்கிறார் நீதிபதி.
மதியம் 2 மணிக்கு வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதி, பாலாஜியை சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவிடுகிறார். அரசு வழக்கறிஞரைப் பார்த்து சராமாரியாக கேள்வி கேட்கிறார் நீதிபதி… ஏன் முனிசிப்பாலிட்டி ஊழியர்களை கைது செய்யவில்லை… வழக்கறிஞர் என்று தெரிந்தும் எந்த அடிப்படையில் கைது செய்தீர்கள்… எப்ஐஆர் எப்போது போடப்பட்டது….. என்ற குற்றம் சாட்டப்பட்ட பாலாஜியின் வழக்கறிஞர் போலவே கேள்வி கேட்கிறார் நீதிபதி. பாலாஜிக்காக வாதாடி விட்டு, மன்னிக்கவும், எல்லாக் கேள்விகளையும் கேட்டு முடித்த நீதிபதி, உடனடியாக பாலாஜியை ஜாமீனில் விடுவிக்கிறேன்… பாலாஜியோடு சேர்ந்து அந்த எப்ஐஆரில் உள்ள மற்ற வழக்கறிஞர்களுக்கு முன் ஜாமீன் வழங்குகிறேன் என்று உத்தரவிட்டார்.
இவ்வளவு பிரச்சனையும் வெறும் 7 ரூபாய்க்காக. இன்றைய விலைவாசியில் 7 ரூபாய் ஒரு பணமா ? எவ்வளவு எளிதாக இந்தப் பிரச்சினையை தவிர்த்திருக்க முடியும் ? முனிசிப்பாலிட்டி ஊழியர்கள் என்பதால், அவர்களிடம் தகராறு செய்தாலோ, சண்டை இழுத்தாலோ, யாரும் எதுவும் கேட்கமாட்டார்கள் என்ற எண்ணம் மட்டுமல்ல….. நான் ஒரு வழக்கறிஞர் என்பதால், என்ன வேண்டுமானாலும் செய்வேன்… என்னை யாருமே கேட்கமுடியாது என்ற எண்ணமே.
வழக்கறிஞர்கள் என்றால் இப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்ற எண்ணமே, பொதுமக்கள் மத்தியில் வழக்கறிஞர்கள் சமூகத்தின் மீது மிகப் பெரும் வெறுப்பை தோற்றுவித்திருக்கிறது. வழக்கறிஞர் என்றால் திருமணத்துக்கு பெண் தருவதில்லை… வாடகைக்கு வீடு தருவதில்லை. வழக்கறிஞர்கள் என்றாலே அடாவடி செய்பவர்கள் என்ற எண்ணத்தை ஊர்ஜிதப்படுத்துவது போலத்தானே இந்தச் சம்பவம் நடைபெற்றிருக்கிறது ?
முனிசிப்பாலிட்டி ஊழியர்கள் வழக்கறிஞர்களைத் தாக்கி விட்டார்கள் என்ற செய்தி கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு வந்த வழக்கறிஞர்கள் யாருக்கும், என்ன நடந்தது என்பதை விசாரிப்போம் என்ற பொறுமை துளியும் இல்லை. வந்ததுமே அடிப்பது, உடைப்பது, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவது என்ற நோக்கத்திலேயே நடந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த சம்பவத்தில் வழக்கறிஞர்களை விட கண்டிக்கப்பட வேண்டியவர்கள், நீதிபதிகள். முதலில் வழக்கறிஞர் பாலாஜியை ரிமாண்ட் செய்ய மறுத்து அலைக்கழித்த நீதிமன்ற நடுவர் சந்திரசேகரனும் சரி, பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கிய சேதுமாதவனும் சரி. இருவருமே சட்டத்துக்குப் புறம்பாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள்.
இரவு நேரத்தில் நூற்றுக்கணக்கான குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்து நீதிபதிகள் முன் நேர்நிறுத்துகிறார்கள். எந்த நேர்விலும் நீதிபதிகள் ஏன் கண்ட நேரத்தில் வருகிறீர்கள்… காலையில் நீதிமன்றத்துக்கு வாருங்கள் என்று சொல்வதில்லை. நீதித்துறை நடுவரிடம் ஆஜர்ப்படுத்தப்படும் குற்றவாளியை சிறையில் அடைப்பதற்கு முகாந்திரம் உள்ளதா, இல்லையா என்பதை ஆராய்ந்து ரிமாண்ட் உத்தரவில் கையெழுத்திடுவதே நீதிபதியின் வேலை. ஆனால், நீதிபதி சந்திரசேகரன் இரவு நேரத்தில் வந்த காவல்துறையினரை கடிந்து கொண்டு, காலையில் வருமாறு கூறியிருக்கிறார்.
இது நியாயமான விஷயம் என்று வைத்துக் கொண்டாலும் கூட, இதை மற்ற கைதிகள் விஷயத்திலும் கடைபிடிக்க வேண்டுமா வேண்டாமா ? காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து அடித்து, கையை காலை உடைத்து, நடக்க முடியாத குற்றவாளிகளை நீதிபதி முன் ஆஜர்படுத்துகையில், “அய்யா கீழ விழுந்துட்டேன்” என்று சொல்வதை அப்படியே ஏற்றுக் கொண்டு ரிமான்ட் உத்தரவில் கையெழுத்து போடுவதில்லையா…. ? இரவு நேரங்களில் எடுத்து வரப்படும் பல கைதிகளை மறுபேச்சு பேசாமல், ஏடிஎம் மிஷின் போல “உங்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கிறேன்” என்று முகத்தைக் கூட பார்க்காமல் ரிமான்ட் உத்தரவில் கையெழுத்திடுவதில்லையா ? பிறகு ஏன் வழக்கறிஞர் என்றவுடன் இந்தச் சலுகை…. ? ரிமான்டுக்கு எடுத்து வரப்படும் குற்றவாளிக்கு மருத்துவப் பரிசோதனைக்காக எந்த நீதிமன்றத்துக்கும் அனுப்ப நீதிபதிக்கு உரிமை உண்டு. ஒரு ஞாயிற்றுக் கிழமையில், தஞ்சை மருத்துவக் கல்லூரி டீன் மட்டுமே பரிசோதிக்க வேண்டும் என்று உத்தரவிடவும் நீதிபதிக்கு உரிமை உண்டு. ஆனால், பரிசோதனை முடிந்து மருத்துவக் கல்லூரியின் தலைவரே சான்றிதழ் அளித்த பிறகும், குற்றவாளி அரசு மருத்துவமனையில்தான் வைக்கப்பட வேண்டும் என்று சொல்வதற்கு எந்த உரிமையும் இல்லை. வழக்கறிஞர்கள் குற்றவாளிகளாக இருந்தால், நீதிபதிகள் எந்த விதிகளையும், சட்டத்தையும் பின்பற்றாமல், மனம் போன போக்கில் உத்தரவுகளை பிறப்பிக்கிறார்கள். இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை மீறி செயல்படுவதற்கு எந்த நீதிபதிக்கும் உரிமைகள் வழங்கப்படவில்லை.
ரிமாண்ட் உத்தரவில் கையெழுத்திட்ட நீதிபதிதான் இப்படி என்றால் மாவட்ட நீதிபதி சேதுமாதவன் அவரையும் மிஞ்சி விட்டார். ஒரு நாள் தாமதமாக வர வேண்டிய ஜாமீன் மனு ஒரே நாளிலேயே விசாரணைக்கு வருகிறது. இதைத் தவறு என்று சொல்ல முடியாது. இந்தச் சலுகை மற்ற கைதிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஏன் வழங்கப்படுவதில்லை என்பதே நமது கேள்வி. எத்தனையோ வழக்குகளில், வயது முதிர்ந்தவர்கள், நோயாளிகள் கைது செய்யப்படுகிறார்கள். அவர்களின் ஜாமீன் மனுவை ஒரே நாளில் விசாரணை செய்ய வேண்டும் என்று கோரினால், எந்த நீதிபதியாவது செவி சாய்ப்பாரா ? எந்த நீதிமன்றத்திலாவது, 12 மணிக்கு தாக்கல் செய்த ஜாமீன் மனு அதே நாளில் 2 மணிக்கு விசாரணைக்கு வருமா ? வழக்கறிஞர்களுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை ?
நீதிபதிகள் வழக்கறிஞர்களுக்கு காட்டும் இந்த சலுகைதான், வழக்கறிஞர்கள், தங்களை சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களாக கருத வைக்கிறது. உங்கள் வழக்கை மட்டும் நான் இன்று விசாரிக்க முடியாது. நாளை ஜாமீன் மனுவை விசாரிக்கிறேன் என்று நீதிபதி சேதுமாதவன் கூறினால், வழக்கறிஞர்கள் அவர் கழுத்தை சீவி விட முடியாது. கத்துவார்கள், கோஷம் போடுவார்கள், சேதுமாதவன் ஒழிக என்று கூறுவார்கள். ஆனால், பொதுமக்கள் பார்வையில் அவர் உயர்ந்திருப்பார். ஆனால், வழக்கறிஞர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்றதோடு மட்டுமல்லாமல், தான் ஒரு நீதிபதி என்பதையும் மறந்து, வழக்கறிஞர்களோடு இரண்டறக் கலந்ததன் மூலம், பொதுமக்களிடையே, வக்கீல் என்ன செஞ்சாலும் யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள் என்ற எண்ணம் வலுப்பெறும் வகையில் நடந்து கொண்டிருக்கிறார்கள் நீதிபதிகள் சந்திரசேகரனும், சேதுமாதவனும்.
மருத்துவர்களுக்கு அடுத்தபடியாக வழக்கறிஞர் தொழில் மிக மிக உயர்ந்தது. வழக்கறிஞர்கள் அணியும் அந்த கருப்பு அங்கி மருத்துவர்களின் வெள்ளைக்கோட்டுக்கு நிகராக பெருமையானது. ஒருவனை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்பதையும், சிறையிலிருந்து வெளி வர வேண்டும் என்ற முடிவு வழக்கறிஞர்களின் கையிலேயே உள்ளது. இந்தப் பெருமையை பல வழக்கறிஞர்கள் உயர்த்திப் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். குஜராத்தில் இஷ்ரத் ஜஹான் என்ற பெண்ணை போலியாக என்கவுன்டரில் கொலை செய்த காவல்துறை உயர் உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதற்கு காரணமும் ஒரு வழக்கறிஞர்தான். தூக்குக் கொட்டடியிலிருந்து பலர் உயிர்களை மீட்டு எடுத்ததும் வழக்கறிஞர்கள்தான். இவ்வவு ஏன், இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படும் காந்தியும் வழக்கறிஞராகத்தான் வாழ்வைத் தொடங்கினார்.
ஏழு ரூபாய் பாலாஜி
அப்படிப்பட்ட பெருமைமிகு வழக்கறிஞர்கள் மத்தியில்தான் பாலாஜியைப் போன்ற கருப்பு ஆடுகள் உருவாகியிருக்கின்றன. இந்த கருப்பு ஆடுகளே ஒட்டுமொத்த வழக்கறிஞர் சமூகத்துக்கும் அவப்பெயரை ஏற்படுத்துகிறார்கள்.
வழக்கறிஞர்கள் என்பதால் கண்ணை மூடிக்கொண்டு அவர்களுக்கு ஆதரவு தராமல், தவறிழைக்கும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்பதை நீதிபதிகள் உணர வேண்டும். நேற்று வரை வழக்கறிஞர்களாக இருந்தாலும் இன்று நீதிபதிகள் என்பதை உணர்ந்து நீதிபதிகள் செயல்படாமல், இப்போதும் வழக்கறிஞர்கள் போலவே செயல்பட்டார்கள் என்றால், இப்போது நீதிபதிகளுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையையும் நீதிபதிகள் இழப்பார்கள் என்பது உறுதி.
நாணல் போல வளைவதுதான் சட்டமாகுமா?
அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா?
தர்மத் தாயின் பிள்ளைகள்
தாயின் கண்ணை மறைப்பதா?
உண்மைதன்னை ஊமையாக்கித்
தலைகுனிய வைப்பதா?