இளவரசன் திவ்யா....
இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த காதல் ஜோடி. ஜாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என்ற கருத்தை வலுப்படுத்தும் நோக்கோடு, எத்தகைய எதிர்ப்புகள் வந்த போதிலும் அதையெல்லாம் துச்சமென தூக்கி எறிந்து காதல் வானில் சிறகடித்து பறந்த பறவைகள்.
ஜாதியால் தலித்தாகவும், வன்னியராகவும் இருந்தாலும் இனத்தால் தமிழர்கள் என்ற எண்ணத்தோடு மணமுடித்து கொண்டவர்கள். ஜாதி அவர்களின் காதலை கட்டுப்படுத்தவில்லை. ஜாதிக்குள் அவர்களும் கட்டுப்படவில்லை.
இந்த திருமணத்தை மையமாக வைத்து ஒரே கோட்டில் நட்போடு பயணித்த பாட்டாளி மக்கள் கட்சியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் எதிரெதிராய் நின்று மோதிக் கொண்டன. கலவர பூமியானது தர்மபுரி.
இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டாலும், அந்த மரணம் திவ்யாவின் காதலை குலைத்துவிடவில்லை. ஆனால், திருமணத்திற்கு பிறகு நிலைமை தலைகீழாக மாற ஆரம்பித்தது. கலவரம் கட்டுப்படுத்தப்பட்டாலும், வன்னியர்களின் ஜாதிவெறி 24 மணி நேரமும் இயங்க ஆரம்பித்தது.
தலித்துக்களுக்கான அரசியல் மௌனமாகிப் போனது. திவ்யாவின் தந்தையினுடைய மரணம் வன்னியர்களை ஒற்றுமைப்படுத்தியது. அந்த ஒற்றுமை திவ்யாவை இளவரசனிடமிருந்து பிரிக்க வேண்டும் என்பதற்கான வேலையை செய்ய ஆரம்பித்தது. முதல்கட்டமாக, திவ்யாவின் தாயாரின் நிலை திவ்யாவுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
திவ்யாவின் தந்தை மரணமடைந்தாலும், மனதுக்குப் பிடித்த இளவரசனை அடைய முடிந்தது. ஆனால் திவ்யாவின் தாயாருக்கு?- கணவரையும் இழந்து, மகளையும் இழந்து தனிமையில் வாட வேண்டிய இக்கட்டான நிலை. இந்த நிலை மகளுக்கு புரிய வைக்கப்பட்டது. மகள் தாயை எண்ண ஆரம்பிக்கிறாள். இங்கு தான் சூழ்ச்சி வெல்ல ஆரம்பிக்கிறது.
தாயை பார்க்க வரும் மகளுக்கு ‘அறிவுரைகள்’ போதிக்கப்பட்டன. இளவரசனை மறக்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஜூன் மாதம் நீதிமன்றத்திற்கு வந்த போது இளவரசன் எந்த தலித் அரசியல் தலைவர்களையும் சந்திக்க விரும்பவில்லை. தன் காதலுக்கு எந்த அரசியல் பின்னணியும் தேவையில்லை என்பதில் அவன் உறுதியாக இருந்தான்.
நாள் ஆக, ஆக திவ்யா இளவரசனை மறக்க தொடங்குகிறாள். திடீரென ஜூலை 1&ம் தேதி தாயுடன் மட்டும் இருக்க போவதாகவும், இளவரசன் வீட்டிற்கு செல்ல போவதில்லை எனவும் அறிவிக்கிறாள். ஒடிந்து போகிறான் இளவரசன்.
இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நினைவுகூற வேண்டும். இந்த காதல் பரபரப்பாக பேசப்பட்ட சமயத்தில் இதுபோன்ற காதல்களை “நாடகக் காதல்” என வசைபாடினார் டாக்டர் ராமதாஸ். ஆனால், சிலர் இந்த காதல் புனிதமானது என மறுத்துரைத்தார்கள்.
இந்த காதலுக்கு தலித் இயக்கங்கள் ஆதரவளித்தன. அப்படி உண்மையாய் காதல் வயப்பட்டவன் தன் காதல் மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றால் எந்த அளவுக்கு வேதனை அடைவான் என்பதை எல்லோரும் உணர்ந்து பார்த்திருக்க வேண்டும்.
இன்றைக்கு இளவரனை இழந்து விட்ட நிலையில், அது கொலையா? தற்கொலையா? என தெரியாத நிலையில், கொலை என்பதை போல சித்தரித்து சுவரொட்டி ஒட்டி மீண்டும் ஒரு கலவரத்துக்கு திட்டமிடுபவர்கள் இளவரசனுக்கு ஆறுதலாய், பாதுகாப்பாய் ஏன் உடன் இருக்கவில்லை-?.
ராமதாஸின் ஜாதிவேறி திவ்யாவை தனிமைப்படுத்தியது. தலித்துகளின் பொறுப்பின்மை இளவரசனை இழக்க வைத்தது.
இடைப்பட்ட காலத்தில் நீதிமன்றத்தில் திவ்யா அறிவிப்பு வெளியிடும் வரை இளவரசனோடு, திவ்யாவை இணைத்து வைப்பதற்கான முயற்சியை எந்த தலித் இயக்கமும் கையில் எடுக்கவில்லை.
முற்போக்காளர்கள் என்று தங்களை தாங்களே பிரகடனப்படுத்திக் கொள்ளும் ஆணியவாதிகளும், பென்ணிய வாதிகளும் திவ்யா & இளவரசன் குடும்ப வாழ்வை தொடருவதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அப்படி முயற்சிகள் எடுக்கபட்டு, இளவரசனோடு திவ்யாவை சந்திக்க வைத்திருந்தால் இந்த மரணம் நிகழ்ந்திருக்காது.
பாதிக்கப்பட்டவனின் அருகிலிருந்து ஆறுதல் வார்த்தைகள் கூறி அவனுக்கு “கவுன்சிலிங்” கொடுத்திருந்தால் இந்த மரணம் நிகழ வாய்ப்பில்லை. இவர்களின் கூற்றுப்படி திட்டமிட்ட கொலை என்று எடுத்து கொண்டாலும், பாதுகாப்புக்கு அருகில் ஆட்கள் இருந்திருந்தால் அது நிகழ வாய்ப்பில்லை அல்லவா? தலித் இயக்கங்களுக்கு சமூக பொறுப்பு குறைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது.
இந்த காதலை மையமாய் வைத்து அரசியல் அரங்கில் காய்கள் நகர்த்தப்பட்டாலும், திவ்யா & இளவரசன் காதல் எல்லோர் மனதிலும் நிழலாடிக் கொண்டேயிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பெரியார் பிறந்த மண்ணில் பெரியாரின் வாரிகளாய் தங்களை காட்டி கொண்டவர்கள் செய்த அரசியல் தந்திரங்களால் இரு குடும்பங்கள் வேதனைகளை அனுபவிப்பதுதான் கொடுமையிலும் பெரிய வன்கொடுமை...
- வேலன்.
நன்றி - ஏகலைவன் வார இதழ்