அகமதாபாத்திலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மோட்டேரா என்ற சிறு நகரத்தில்தான் 42 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மனிதர் வந்து இறங்கினார். அப்போது அவருக்குக் கிடைத்த அரசியல் தொடர்புகளால் 10 ஏக்கர் நிலம் அவருக்குக் கிடைத்தது. இன்றைய பாகிஸ்தானில் 1941ம் ஆண்டு பிறந்த ஆசாராம் ஹர்பலானி என்ற அந்த நபர்தான் இன்று ஆசாராம் பாபு என்று அழைக்கப்படுகிறார். டெல்லியில் ஓடும் பேருந்தில் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட போது, பெண் ஒத்துழைக்காமல் எப்படி அந்த வன்முறை நிகழ்ந்திருக்க முடியும்; அந்தப் பெண் தன் மீது வன்முறையைப் புகுத்தியவர்களிடம், கெஞ்சியிருக்க வேண்டும் என்று தத்துவத்தை உதிர்த்தவர்தான் இந்த ஆசாராம். இன்று உலகெங்கும் 400 ஆசிரமங்களை வைத்துள்ள ஆசாராம் ஒரு 16 வயதுப் பெண்ணை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார். இது வெளியுலகுக்கு பரவலாக தெரிந்த விஷயம். வெளியில் தெரியாத ஒரு சர்ச்சை 2008ம் ஆண்டு முதல் இந்த ஆசிரமத்தைச் சுற்றி வருகிறது. அபிஷேக் வகேலா மற்றும் தீபேஷ் வகேலா என்ற இரு சிறுவர்கள், பால கேந்திரா என்ற ஆசிரமத்தினுள் இயங்கும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். சேர்ந்த சில நாட்களில் இரு சிறுவர்களும் மொட்டையடிக்கப்பட்டு நெற்றியில் நாமத்தோடு இருப்பதை அந்தச் சிறுவர்களின் பெற்றோர் பார்க்கின்றனர். ஒரு சில மாதங்களில் இரண்டு சிறுவர்களும் வீட்டுக்கு வந்தார்களா என்று ஆசிரமத்திலிருந்து பெற்றோருக்கு கேட்டு போன் வந்தது. பதறிப்போன பெற்றோர்கள் ஆசிரமத்தில் சென்று தேடுகின்றனர். பல இடங்களில் தேடியும் சிறுவர்கள் கிடைக்காமல் பெற்றோர்கள் அலைகின்றனர். அப்போது, ஆசிரமத்தின் நிர்வாகியான பங்கஜ் சக்சேனா, அரச மரத்தை 11 முறை சுற்றி வந்து, கடவுளிடம் வேண்டினால் சிறுவர்கள் கிடைத்து விடுவார்கள் என்று கூறுகிறார். அந்த அப்பாவிப் பெற்றோர்கள் அதையும் செய்கிறார்கள். அப்போதும் குழந்தைகள் கிடைக்காததால், பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க முயல்கின்றனர். பெற்றோர்களை தடுத்த ஆசிரம நிர்வாகம், அங்கே போகக்கூடாது என்று மிரட்டுகின்றனர். இறுதியாக வேறு வழியில்லாமல் ஆசிரமத்தினரின் மிரட்டலையும் மீறி, பெற்றோர்கள் சந்கேடா காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றால், அங்கே ஆசிரமத்தைச் சேர்ந்த விகாஸ் கேம்ச்சா மற்றும் அஜய் ஷா ஆகியோர் காவல்நிலையத்தில் காத்திருக்கின்றனர். இவர்களுக்கு முன்பாக காவல்நிலையத்தில் உள்ளவர்களிடத்தில் பேசி விட்டு, புகார் எதுவும் கொடுத்தாலும், காவல்துறை பதிவு செய்யாது என்று தெரிவித்து விடுகின்றனர். காவல்துறையும் அதே போல புகாரை வாங்க மறுக்கின்றனர்.
இதையடுத்து, ஆசாராம் அந்தப் பெற்றோர்களிடம் ஒரு செய்தியை அனுப்புகிறார். ஒரு சாலையின் சந்திப்புக்குச் சென்று, அந்த கற்களை எடுத்து, ஏழு கற்களை எடுத்து, அந்த கற்களையும், அந்தக் குழந்தைகளின் உடைகளையும் கொதி நீரில் போட்டு, குழந்தைகள் தங்கும் அறையில் அந்த துணிகளை காய வைத்தால், நான்கு மணி நேரத்தில் குழந்தைகள் வந்து சேர்வார்கள் என்று கூறுகிறார். இதையெல்லாம் செய்தும் குழந்தைகள் திரும்பவில்லை. ஆனால் மறுநாள், ஆசிரமத்தை ஒட்டிய ஒரு நதியோரம் இரண்டு குழந்தைகளின் உடலும் கண்டெடுக்கப்படுகிறது. சிறுவன் தீபேஷின் உடலில் வலது கை இல்லை. நெஞ்சுக் கூட்டைத் தவிர மற்ற உறுப்புகள் அனைத்தும் காணாமல் போயிருந்தது. உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு ஆசிரமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆயுதங்களோடு வந்து இறங்குகிறார்கள். காவல்துறையினரிடம், ஆசிரமத்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்யச் சொல்லி கோரிக்கை விடுத்த பெற்றோர்களை மிரட்டுகிறார்கள். பயந்து போன பெற்றோர்கள் அந்த இடத்திலிருந்து தப்பிச் செல்கின்றனர். மர்மமான முறையில் இறந்து போன குழந்தைகளைப் பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. செய்தி வெளியிட்ட செய்தியாளர்கள் தாக்கப்படுகிறார்கள். திவ்ய பாஸ்கர் என்ற ஊடகத்தின் செய்தியாளர் ஆசிரமத்திற்குள்ளாகவே கட்டி வைத்து அடிக்கப்படுகிறார். ஆசாராம் நடத்திய மற்றொரு ஆசிரமத்தில் ராமகிருஷ்ண யாதவ் மற்றும் வேதாந்த் மோரயா என்ற இரண்டு சிறுவர்கள் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள்.
பொதுமக்களிடையே எழுந்த கடும் எதிர்ப்பைக் கண்ட உத்தம சீலர் நரேந்திர மோடி ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆயைத்தை அமைக்கிறார். ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஆட்சியாளர்களின் கைப்பாவையாகத்தானே இருப்பார்கள் ? அதே போல அந்த நீதிபதியும், ஆசிரமத்தைச் சேர்ந்தவர்களையோ, ஆசாராமையோ விசாரிக்காமலேயே விசாரணையை நடத்துகிறது. இறுதியாக ஆசாராமுக்கு விசாரணை ஆணையம் அனுப்பிய சம்மனுக்கு எதிராக உயர்நீதிமன்றம் சென்ற ஆசாராமுக்கும், விசாரணை ஆணையத்துக்கும் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது குஜராத் உயர்நீதிமன்றம். உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் “இந்த விசாரணையில், விசாரணை ஆணையம், ஆசாராம் மற்றும் அவர் மகன் முன்பாக மண்டியிட்டு, எப்படியாவது ஒரு முறை வந்து எங்கள் முன்பாக சாட்சி சொல்லுங்கள் என்று இறைஞ்சியிருப்பதைக் காண முடிகிறது. இது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்து கொண்டிருப்பது தெரிகிறது” என்று கடுமையான கண்டனங்களை உயர்நீதிமன்றம் தெரிவித்த பிறகே, விசாரணை ஆணையத்தின் முன் ஆசாராம் ஆஜரானார்.
இந்த ஆசாராமுக்கு சற்றும் குறைந்தவர் இல்லை ஜக்கி வாசுதேவ். ஆசாராமின் ஆசிரமத்தில் நடத்தப்படும் பால கேந்திரா போலவே, ஜக்கி வாசுதேவின் ஆசிரமத்திற்குள்ளாகவும், ஈஷா சம்ஸ்கிருதி என்றொரு பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி, மாநில கல்வித்திட்டம், சிபிஎஸ்இ கல்வித்திட்டம், மெட்ரிகுலேஷன் கல்வித் திட்டம் ஐசிஎஸ்இ கல்வித்திட்டம் ஆகிய எந்த திட்டத்திலும் சேராது. அடிப்படை ஆங்கிலம், தமிழ் மற்றும் கணிதத்தைத் தவிர வேறு எந்தப் படிப்புகளும் குழந்தைகளுக்கு சொல்லித் தரப்பட மாட்டாது. இந்தக் குழந்தைகள் மற்ற குழந்தைகளைப் போல முறையான கல்வித்திட்டத்தின் கீழ் கல்லாமல் இந்த திருட்டுச் சாமியார் சொல்லித்தரும் விஷயங்களைக் கற்றுக் கொண்டு விலங்குகள் போலத் திரிய இருக்கிறார்கள். ஈஷா தொடர்பாக சவுக்கில் கட்டுரை எழுதப்பட்டதற்குப் பிறகு, பல வயதானவர்கள் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள். அவர்கள் அவ்வளவு பேரும் தவறாமல் சொல்லும் விஷயம், எங்கள் பேரக்குழந்தைகள் ஈஷா சம்ஸ்கிருதியில் படிக்கிறார்கள். அந்தப் பிள்ளையின் எதிர்காலம் பாழாகப் போய்க் கொண்டு இருக்கிறது… இது தொடர்பாக தொடர்ந்த வழக்குகளில் விரைவாகத் தீர்ப்பு வர ஏற்பாடு செய்யுங்கள் என்பதே… குழந்தைகளின் பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், தாய் தந்தை இருவரும், இந்தத் திருட்டுச் சாமியாருக்கு அடிமைகளாக இருக்கிறார்கள். நாங்கள் வயதானவர்களாக இருப்பதால், எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எப்படியாவது எங்கள் பேரக்குழந்தைகளைக் காப்பாற்றுங்கள் என்று பலர் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இவர்கள் எந்த அளவுக்கு நெருக்கடியில் இருக்கிறார்கள் என்றால், இவர்களின் பிள்ளைகள், அதாவது குழந்தைகளின் பெற்றோர்கள், இந்தத் திருட்டுச் சாமியாருக்காக, தங்கள் பெற்றோர்களைக் கூட தூக்கி எறியத் தயங்காத அளவுக்கு அவர்களை மூளைச் சலவை செய்து வைத்திருக்கிறார் இந்த திருட்டுச் சாமியார்.
இந்த சம்ஸ்கிருதி பள்ளி, எவ்வித அங்கீகாரமும் இன்றி தொடர்ந்து நடைபெற ஜெயலலிதாவும் உடந்தையாக உள்ளார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இந்தப் பள்ளியை இழுத்து மூட வேண்டும் என்று வழக்கறிஞர் வெற்றிச் செல்வன் தொடர்ந்த பொது நல வழக்கில், தமிழக அரசுக்கும் சென்ன உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் இது வரைக்கும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் ஒருவர் கூட, இந்த ஈஷா சம்ஸ்கிருதி பள்ளியை ஆய்வு செய்யவில்லை. இந்த திருட்டுச் சாமியாரின் செல்வாக்கு அந்த அளவுக்கு இந்தியா முழுவதும் பரவியுள்ளது.
இந்த திருட்டுச் சாமியாரின் செல்வாக்குக்கு மற்றொரு உதாரணம். தமிழ் இந்தியா டுடேவில் ஈஷா ஆசிரமம் எப்படியெல்லாம் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளது, இதனால் எத்தனை வன விலங்குகள் இறந்துள்ளன என்பது குறித்து கவின்மலர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார் இணைப்பு. இந்தக் கட்டுரைக்குப் பிறகு, டெல்லியில் உள்ள இந்தியா டுடே நிர்வாகத்தோடு தொடர்ந்து லாபி செய்து திருட்டுச் சாமியார் தனது நிகழ்ச்சியை ஒவ்வொரு வாரமும், இந்தியா டுடே குழுமத் தொலைக்காட்சியான ஹெட்லைன்ஸ் டுடேவில் ஒளிபரப்பச் செய்துள்ளார். ஒளிரப்பச் செய்ததோடு மட்டுமல்லாமல், இந்தியா டுடேவில் இந்தக் கட்டுரை வெளி வர உதவியாக இருந்தவர்களிடம், ஹெட்லைன்ஸ் டுடே நிகழ்ச்சியைப் பற்றிப் பேசி எள்ளி நகையாடியிருக்கிறார்கள் ஈஷா நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள்.
திருட்டுச் சாமியார் ஜக்கி வாசுதேவ் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்துக்கு செல்வதற்கு முன்னால், அந்த இடத்தில் பழங்குடியின மக்களும், விலங்குகளும் சாதாரணமாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் எவ்விதமான மோதலும் இல்லை. ஆனால் ஜக்கி வாசுதேவ் அந்த வனப்பகுதியில் தொடர்ந்து சட்டவிரோதமாக பல்வேறு கட்டிடங்களை கட்டிக் கொண்டே செல்லவும், விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான உறவு சிதைந்து, விலங்குகள் இறப்பதும், மனிதர்கள் இறப்பதும் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஈஷா மையத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகளால் தாக்கப்பட்டு இறந்த யானைகளின் எண்ணிக்கை மட்டும் பத்துக்கும் மேல். ஈஷா யோக மையத்தைச் சுற்றி அமைந்துள்ள வெள்ளிமலைப்பட்டினம், ஜாகிர்நாயக்கன் பாளையம், நரசிபுரம் மற்றும் செம்மேடு பகுதியில் மட்டும் 2006ம் ஆண்டு முதல் 60க்கும் மேற்பட்ட பொதுமக்கள் யானை தாக்கி இறந்துள்ளனர்.
ஈஷா மையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் மட்டும் 30க்கும் மேற்பட்டோர் யானை தாக்கி இறந்துள்ளனர். 2006ம் ஆண்டு முதல் 60க்கும் மேற்பட்ட யானைகள் இறந்துள்ளன. இறந்த மனிதர்களில் பெரும்பாலானோர், தாணிக்கண்டி என்ற மலைவாழ் இனத்தைச் சேர்ந்த மக்கள். அத்தனைக்கும் ஆசைப்படாதே என்ற கட்டுரையில் விரிவாக எழுதியிருந்தது போல, தாணிக்கண்டி பழங்குடி மக்களுக்கும், விலங்குகளுக்கும் மிக மிக நெருக்கமான உறவு காலங்காலமாக இருந்து வருகிறது. இந்த திருட்டுச் சாமியார் அந்த மலைப்பகுதிக்குச் சென்றதிலிருந்துதான், இது போன்ற தொடர்ந்த சாவுகள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த ஆகஸ்ட் 23 அன்று கூட, ஈஷா மையத்திற்கு வெகு அருகில் உள்ள முல்லங்காடு என்ற இடத்தில் சுப்பாத்தாள் என்ற 67 வயது பழங்குடியினப் பெண், யானையால் தாக்கப்பட்டு இறந்தார். சுப்பாத்தாள் இறந்தது, ஈஷா மையத்தின் மகா முத்ரா என்ற கட்டிடத்துக்கு வெகு அருகில் என்பது குறிப்பிடத் தக்கது. ஈஷா மையத்தின் மின்வேலியைத் தொட்டு தாக்கப்பட்ட யானை, கடுங்கோபத்தில் எதிரில் வந்த சுப்பாத்தாளை தூக்கி வீசியது என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
சுப்பாத்தாள்
இது போன்ற தொடர்ச்சியான மனித மற்றும் யானைகளின் மரணத்துக்கு ஈஷா மையம் காரணமாக இருந்து வருகிறது. இந்த ஈஷா மையத்தின் அத்தனை கட்டிடங்களுக்கும் உள்ளாட்சி அமைப்பு, வனத்துறை, நகர்ப்புற மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகிய எந்த அமைப்புகளிடமும் அனுமதி பெறாத கட்டிடங்களின் பரப்பளவு 4 லட்சத்து 27 ஆயிரத்து 700 சதுர மீட்டர்கள். இந்த கட்டிடங்களின் பரப்பளவு ஆகஸ்ட் 2012 அன்று உள்ளபடி. கடைசியாக மார்ச் 2013 அன்று ஈஷா மையத்தை நேரில் ஆய்வு செய்தபோது, பல்வேறு கட்டிடப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
ஜனவரி 2013 அன்று நகர் ஊரமைப்புத் துறை கோவை துணை இயக்குநர் சபாபதி, சென்னையில் உள்ள நகர் ஊரமைப்புத் துறையின் இயக்குநருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில் கட்டிடம் கட்ட வனத்துறையிடம் ஈஷா மையம் 20.07.2011 அன்று கட்டிடம் கட்ட அனுமதி கேட்டு நகர் ஊரமைப்புத் துறையிடம் விண்ணப்பித்திருந்தது. அந்த விண்ணப்பம் முறையாக இல்லை என்றும், முழுமையான விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறும், ஈஷா மையத்தில் நடக்கும் கட்டுமானப் பணிகளுக்கும், அனுமதி கேட்டு சமர்ப்பித்த விண்ணப்பத்துக்கும் முரண்பாடுகள் உள்ளன என்றும் அவற்றையெல்லாம் சரி செய்து, வனத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையின் தடையின்மைச் சான்றோடு, முழுமையான விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தி ஈஷா மையத்துக்கு 12.10.2012 அன்று கடிதம் அனுப்பப்பட்டது.
ஆனால் 02.11.2012 அன்று நேரில் ஆய்வு செய்தபோது, கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றதால், கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு அறிவுறுத்தி 05.11.2012 அன்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அப்படியும் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்படாததால், கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் நோட்டீஸ் 24.12.2012 அன்று அனுப்பப் பட்டது. ஈஷா மையம் ஏற்கனவே அளித்திருந்த விண்ணப்பம் சரி செய்யப்பட்டு, அனுப்பப்படாததால், அந்த விண்ணப்பம் 24.01.2013 அன்று ஈஷா மையத்துக்கே திருப்பி அனுப்பப்பட்டது. சட்டவிரோதமாக கட்டிய கட்டிடங்களை இடித்து விட்டு, கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கு முன்பாக இருந்தது போல அந்த இடத்தை மாற்றவேண்டும் என்று வழங்கப்பட்ட சீலிங் நோட்டீஸுக்கான காலக்கெடு 26.01.2013 அன்று முடிந்து விட்டது.
இந்நிலையில், ஈஷா மையத்தின் மீது நடவடிக்கை எடுக்க தேவையான உத்தரவுகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று துணை இயக்குநர் அவரது கடிதத்தில் தெரிவித்திருந்தார். இந்த கடிதத்தில் கோரியுள்ளபடி நடவடிக்கை எடுக்க வேண்டியது, நகர் ஊரமைப்புத் துறையின் இயக்குநர். தற்போது அந்தப் பதவியில் இருப்பவர் கார்த்திக் ஐஏஎஸ். ஜனவரி மாதம் முதல், இன்று வரை துணை இயக்குநரின் கடிதத்தின் மீது எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார் கார்த்திக் ஐஏஎஸ்.
கார்த்திக் ஐஏஎஸ் ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார் ? இதற்குப் பின்னால் ஒரு சுவையான கதை இருக்கிறது. கார்த்திக் ஐஏஎஸ்ஸுக்கு ராஜலட்சுமி என்பவரோடு 02.02.1998 அன்று திருமணம் நடக்கிறது. இந்த ராஜலட்சுமி முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கனகராஜின் மகள். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இந்த கார்திக்குக்கு கிருஷ்ணகுமார் என்று ஒரு நண்பர் உண்டு. அந்த கிருஷ்ணகுமாரின் மனைவி பெயர் பிரியதர்ஷினி. கிருஷ்ணகுமாரோடு நெருக்கமான நட்பு பாராட்டிய கார்த்திக், அவர் மனைவியோடும் “நெருக்கமான“ நட்பு பாராட்டுகிறார். இந்த நட்பு, நாளொரு “மேனியும்“ பொழுதொரு வண்ணமுமாக வளர்கிறது. எந்த அளவு இந்த நட்பு வளர்கிறதென்றால், எம்ஏஎம் பீச் ரிசார்ட், தாஜ் கன்னிமரா, ஜேப்பியார் ரிசார்ட், மகாபலிபுரம், குயின்ஸ் லான்ட், எம்ஜிஎம் ரிசார்ட் போன்ற இடங்களில் தங்கி “முக்கிய“ விவாதங்களில் ஈடுபடும் அளவுக்கு வளர்கிறது. கிருஷ்ணகுமார் ஒரு சாதாரண நபர். ஐஏஎஸ் அதிகாரியின் உறவு சாதாரண நபரின் உறவை விட சிறந்ததல்லவா ? அதனால், பிரியதர்ஷினி, கிருஷ்ணகுமார் பேச்சுக்கு “கா“ விட்டு விடுகிறார். சென்னை குடும்ப நீதிமன்றத்தில் கிருஷ்ணகுமாரிடம் இருந்து விவாகரத்து கோரி வழக்கு தொடர்கிறார். இதற்கிடையே, கார்த்திக் ஐஏஎஸ்ஸும், பிரியதர்ஷியியும், தனியாக வீட்டில் வசிக்கத் தொடங்குகின்றனர்.
கார்த்திக் ஐஏஎஸ்
இந்த நிலையில் கார்த்திக் ஐஏஎஸ் பற்றி நக்கீரனில் கட்டுரை எழுதுமாறு கோரப்படுகிறது. நீதிபதி கனகராஜ், நக்கீரன் கோபால், ஜெயலலிதா அரசால் பல்வேறு வழக்குகளில் இழுத்தடிக்கப்பட்டபோது, நியாயமாக தீர்ப்பு வழங்கி காப்பாற்றியவர். உள்ளபடியே, நக்கீரன் நீதிபதி கனகராஜுக்கு கடமைப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரைக்காக, பல்வேறு நபர்களை சந்தித்து பேசி, கட்டுரை இறுதி செய்யப்பட்டபோது, கார்த்திக் ஐஏஎஸ்க்கு இந்த விஷயம் தெரிய வருகிறது. எப்படியாவது, இந்தக் கட்டுரையை நிறுத்த வேண்டும் என்று கார்த்திக் முயற்சி செய்கிறார். நக்கீரனில் அனைத்தும் காமராஜ்தானே… ? காமராஜை எப்படி சரிக்கட்டுவது என்று கார்த்திக் ஐஏஎஸ் முயற்சி எடுக்கையில்தான், திருட்டுச் சாமியார் ஜக்கி வாசுதேவ் சொன்னால் காமராஜ் கேட்பார், ஜக்கியின் விசுவாசமான அடிமை காமராஜ் என்ற தகவல் தெரிய வருகிறது. உடனடியாக ஜக்கி மூலமாக, காமராஜை அணுகி, அந்தக் கட்டுரை நக்கீரனில் வெளிவராமல் நிறுத்தப்படுகிறது.
இப்போது கார்த்திக் ஐஏஎஸ் ஜக்கிக்கு கடமைப்பட்டவரா இல்லையா ? கார்த்திக் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக தனது கடமையைச் செய்வாரா ? தன்னைப் பற்றிய கட்டுரை வெளிவராமல் தடுத்த ஜக்கி வாசுதேவுக்கு உதவ நினைப்பாரா ? இதனால்தான், கார்த்திக் ஐஏஎஸ், ஊரக நகரமைப்புத் துறையின் துணை இயக்குநர், ஈஷா மையத்தின் சட்டவிரோதமான கட்டிடங்களை இடிக்க உத்தரவு வேண்டும் என்ற கடிதத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், கட்டி வைத்திருக்கிறார்.
இந்த திருட்டுச் சாமியார்தான் இன்று முதல், மூன்று நாட்களுக்கு நேரடியாக சென்னை மீனம்பாக்கம் அருகே, யோகா சொல்லித் தந்து கொண்டிருக்கிறார். இந்த திருட்டுச் சாமியாரின் திருட்டுத் தனத்துக்கு இன்னொரு உதாரணம். இந்த திருட்டுச் சாமியார், ஒரு கைதேர்ந்த கார்ப்பரேட் ஆசாமி என்பதற்கு, நகரெங்கும் இந்த நேரடி யோகா பயிற்சிக்காக வைக்கப்பட்டுள்ள விளம்பரங்களே சாட்சி. இந்த நேரடி யோகா பயிற்சி தொடர்பாக சென்னையில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. இந்த சந்திப்புக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது யார் தெரியுமா ? தமிழ்த்திரையுலகின் நம்பர் ஒன் மக்கள் தொடர்பாளர்.. இவர்தான் கமல், ரஜினி, விஜய் உள்ளிட்ட ஏறக்குறைய அனைத்து நட்சத்திரங்களுக்குமான செய்தித் தொடர்பாளர். நிகில் முருகன்.
பத்திரிக்கையாளர் சந்திப்பு
ஒரு சாமியார் தான் நடத்தும் யோகா நிகழ்ச்சிக்கான பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு திரையுலகின் நம்பர் ஒன் மக்கள் தொடர்பாளரை பயன்படுத்துகிறார் என்றால், எந்த அளவுக்கு, இந்த திருட்டுச் சாமியார் மக்களை மூளைச்சலவை செய்யும் வேலையில் இறங்கியிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இப்படி வெளிப்படையாக இந்நாட்டின் சட்டத்தினை மதிக்காமல், வன விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் தொடர்ந்து ஆபத்து ஏற்படுத்தி வரும் இந்த திருட்டுச் சாமியார்தான் உலக சமாதானத்தைப் பற்றிப் பேசுகிறான். இப்படிப்பட்ட திருட்டுச் சாமியார் கட்டி வரும் சட்டவிரோதமான கட்டிடங்களை இந்நேரம் இடித்திருக்க வேண்டுமா வேண்டாமா ? யானைகளின் நலன் விரும்பியாக தன்னை காண்பித்துக் கொண்டு, யானைகளுக்கான சிறப்பு முகாம் நடத்தி, குட்டி யானைக்கு கரும்பு ஊட்டும் ஜெயலலிதாவுக்கு, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் 300க்கும் மேற்பட்ட யானைகள், மின்வேலி என்ற ஆபத்தை தினம் தினம் சந்தித்துக் கொண்டிருப்பது தெரியுமா ? ஜோசியக்காரர்களின் அறிவுரைப்படி, குருவாயூர் கோயிலுக்கு கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்து விட்டு, மறுநாள் யானை தானம் செய்து, யானைகளுக்காக முகாம் நடத்தினால் இந்தியாவின் பிரதமராகலாம் என்ற கனவில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு, அவரது ஆட்சிக்குட்பட்ட பகுதியில், ஒரு திருட்டுச் சாமியாரின் சட்டவிரோதமான கட்டிடங்களால், தினம் தினம் யானைகள் ஆபத்துக்குள்ளாகின்றன என்பது தெரியுமா தெரியாதா ?
நக்கீரன் காமராஜோடு நெருக்கமான ஒரு நபர்தான், நக்கீரன் காமராஜின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, ஈஷா மையத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் வாளாயிருந்து வருகிறார் என்பது ஜெயலலிதாவுக்கு தெரியுமா தெரியாதா ?
அனைத்தையும் கற்று துள்ளித் திரிய வேண்டிய பள்ளிக் குழந்தைகள் சிறு வயது முதலே சாமியார் ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஜெயலலிதாவுக்குத் தெரியுமா தெரியாதா ?
இவையெல்லாவற்றையும் தாண்டி, இந்த திருட்டுச் சாமியார் கருணாநிதிக்கு நெருக்கம் என்ற ஒரே காரணத்துக்காகவாவது, இந்த சாமியாரின் கட்டிடங்களை இடித்து, இந்த சாமியாரை தமிழ்நாட்டை விட்டே விரட்ட வேண்டுமா வேண்டாமா ?
இத்தனை வலுவான ஆதாரங்கள் இருந்தும், இன்னும் இது போன்ற திருட்டுச் சாமியார்களை வளர விட்டு வேடிக்கைப் பார்க்கும் ஜெயலலிதாவின் அரசு முட்டாள் அரசா இல்லையா ?