Advani should drop ‘v’ from his name if he wants Modi to listen: Arvind Kejriwal
இதுதான் அர்விந்த் கேஜ்ரிவால், மோடியைப் பற்றி எழுதிய ட்வீட். அர்விந்த் கேஜ்ரிவால் அர்த்தமில்லாமல் பேசுபவர் அல்ல. நகைச்சுவையாக பகடிக்காக எழுதப்பட்ட கட்டுரையாக இருந்தாலும், இந்த வார்த்தைகளில் ஆயிரம் பொருள் உண்டு. காங்கிரஸ் கட்சி அம்பானிகளின் நலனைப் பாதுகாப்பதில், நாட்டின் மக்களின் நலன்களை எப்படி காவு கொடுக்கிறதோ, அதற்கு எந்த வகையிலும் சளைக்காதவர்தான் மோடி. காங்கிரஸ் கட்சியில் நடக்கும் ஊழல்களையாவது, எப்படியாவது வெளிக்கொணர முடிகிறது. ஆனால் நரேந்திர மோடியின் ஊழல்களை வெளிக்கொணர்வதே பெரும் சாதனையாக இருக்கிறது. அந்த அளவுக்கு ஒரு அசாதாரணமான, சர்வாதிகாரியாக குஜராத்தில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் மோடி.
அடானி குழுமம் நரேந்திர மோடி என்ற ஒரு நபரால் எப்படி ஒரு அசுர வளர்ச்சி கண்டிருக்கிறது என்பதையும், அவர்களது பெருலாபத்துக்காக, நரேந்திர மோடி மக்கள் சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு எப்படி வழங்கினார் என்பதையும் விளக்குவதே இக்கட்டுரை.
கவுதம் அடானியின் மகன் திருமணம் கோவாவில் கடந்த ஆண்டு நடந்தபோது, அதில் பங்கேற்றவர்களின் பட்டியலில் இந்தியாவின் பெரும் செல்வந்தர்கள், தனியார் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள், வங்கி அதிகாரிகள் என்று பலர் இருந்தனர். ஆனால் அவர்கள் அனைவரும், முதல் நாள் மாலை நடந்த வரவேற்பில் பங்கேற்று விட்டு, மணமக்களை வாழ்த்தி விட்டு அன்று இரவே திரும்பி விட்டனர். ஆனால், ஒரு நெருங்கிய உறவினர் போல, ஒரு தாய் மாமனைப் போல, இரண்டு நாட்கள் தங்கியிருந்து விழாவை சிறப்பித்தார் ஒருவர். அவர் வேறு யாரும் அல்ல. அடானியின் சொந்த மாநிலமான குஜராத்தின் முதலமைச்சர் நரேந்திர மோடிதான் அவர்.
2.8 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்போடு உலகில் 609-வது பணக்காரராக இருக்கும் அடானியின் தொழில்களில், இந்தியாவின் மிகப் பெரிய துறைமுகம், மின் உற்பத்தி நிறுவனம் மற்றும் ஆன்லைன் வணிகம் ஆகியவை அடங்கும். இவரது தொழில் சாம்ராஜ்ஜியத்தின் பெரும்பகுதி மோடியின் குஜராத்தில்தான் உள்ளன. குஜராத்தில் உள்ள மற்ற தொழில் அதிபர்களுக்கு தரப்படாத பல சலுகைகளை மோடி அடானிக்கு வழங்கியிருக்கிறார்.
2005-ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 7350 ஹெக்டேர் நிலங்களை, குஜராத் கல்ஃப் ஆப் கட்ச் என்ற பகுதியில் உள்ள முந்த்ரா என்ற இடத்தில் குத்தகைக்கு எடுத்திருக்கிறார் அடானி. இடத்தின் வாடகை ஒரு சதுர மீட்டருக்கு ஒரு ரூபாய் முதல் 32 ரூபாய் வரை. இப்படி குத்தகைக்கு வாங்கிய இடத்தை அடானி பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு ஒரு சதுர மீட்டர் 671 ரூபாய் அளவுக்கு உள் வாடகைக்கு விட்டுக் கொண்டிருக்கிறார். 2005-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை ஏறக்குறைய 1200 ஹெக்டேர் மேய்ச்சல் நிலங்கள் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு அடானிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய சட்டங்களின்படி, மேய்ச்சல் நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்ற முடியாது. மாறாக மேய்ச்சல் நிலங்கள் அபரிமிதமாக இருந்தால் மட்டுமே அதை வேறு பயன்பாட்டுக்கு மாற்றமுடியும். ஆனாலும், அதைக் கணக்கிடவென்று சில முறைகள் உள்ளன. அந்த ஊர்த்தலைவர் நிலத்தை கையகப்படுத்த சம்மதம் தர வேண்டும். அடானியின் சிறப்புப் பொருளாதார மண்டலம் இருக்கும் பகுதியில் இருக்கும் கிராமத்தினர், அவர்களின் மேய்ச்சல் நிலங்கள் இதற்கு முன்பு இருந்த பஞ்சாயத்து தலைவர்களால், கிராமத்தினரின் சம்மதம் இல்லாமலேயே அடானிக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர். இது போல மேய்ச்சல் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, சிறப்பு பொருளாதார மண்டலங்களாக மாற்றப்பட்டதை எதிர்த்து பல்வேறு வழக்குகள் குஜராத் உயர்நீதிமன்றத்தில் 2005-ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளன.
இப்படி மலிவாக கிடைத்த அந்த நிலத்தில்தான் அடானி நிறுவனம், பணத்தை அள்ளி அள்ளித் தரும் 4620 மெகாவாட் அனல் மில்லையும், இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறைமுகத்தையும் கட்டியுள்ளது.
முந்த்ரா கிராமத்தினருக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வரும் ஆனந்த் யாக்னிக் என்ற வழக்கறிஞர், "தாராளமயமாக்கலின் அடிப்படைத் தத்துவம், சந்தை சக்திகளுக்கு சுதந்திரம் தருவதே. அப்படி இருக்கையில், சந்தை விலைக்கே வாங்கக் கூடிய செல்வச் செழிப்புள்ள தொழில் அதிபர்களுக்கு மலிவான விலையில் இயற்கை வளங்களை எதற்காக கொடுக்க வேண்டும்" என்று கேள்வி எழுப்புகிறார்.
குஜராத் பொருளாதார மாடலின் அடிப்படையில் இந்தியப் பொருளாதாரத்தை மாற்றி அமைக்கப் போவதாக வாக்குறுதி அளித்து மோடி இந்தத் தேர்தலை சந்திக்க இருக்கிறார். அதனால்தான், கடந்த பிப்ரவரியில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மோடி இந்தியாவின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் வெளிப்படையான போட்டி அடிப்படையாக இருத்தல் அவசியம் என்றார். அது கவனிக்கப்படத்தக்கது.
வெளிப்படையாக பார்த்தால், அடானி துறைமுகம் பொருளாதாரத்தை முன்னேற்றுவதாக தோன்றும். பிப்ரவரி மாதத்தில் இரண்டு சிறு படகுககள், சரக்கு ஏற்றப்பட்ட ஒரு பெரிய கப்பலை வழிநடத்தின. இன்னொரு புறம் நவீன மாடல் மாருதி கார்கள் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன. மற்றொரு புறம், குஜராத்தில் தோண்டி எடுக்கப்பட்ட பாக்சைட், பென்டோனைட், இரும்புத் தாதுக்கள் ஏற்றுமதிக்காக குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன.
சமீபத்திய புள்ளி விபரங்களின்படி, மோடி ஆட்சிக் காலத்தில் குஜராத்தின் வளர்ச்சி விகிதம் 13.4 சதவிகிதமாக வளர்ந்திருந்தது. அதே நேரத்தில் தேசிய வளர்ச்சி விகிதம் 7.8 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது. மோடியின் கொள்கைகள் காரணமாக வாகன உற்பத்தி மற்றும் சூரிய ஒளி மின்சக்தி ஆகிய துறைகளில் ஏராளமான முதலீடுகள் வந்தன. குஜராத் மழை நீர் சேகரிப்பு மற்றும் நீர் பாசனத்தில் பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளதோடு, மாநிலமெங்கும் 24 மணி நேர மின்சாரம் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் தேசிய அளவில் கடந்த மூன்று ஆண்டுகளில் 9 சதவிகிதம் மின்வெட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்காங்கே இளஞ்சிவப்பு, ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிற போகன்வில்லா செடிகளோடு வழுவழுப்பான சாலைகளில் நீங்கள் மிகப்பெரிய நகரமான அடானியின் சிறப்பு பொருளாதார மண்டலத்தை சுற்றி வர முடியும். இந்தத் திட்டத்தின் பின்னணி, அடானியின் துறைமுகத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள அடானி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழில் தொடங்கி பயனடையலாம் என்பதே. கூடுதலாக, அடானி 40 மைல் நீளமுள்ள தனியார் ரயில்வே பாதையை அமைத்து அதை தேசிய ரயில்வே பாதையோடும் 1.1 கிலோ மீட்டர் நீளமுள்ள தனியார் விமான ஓடுதளத்தோடும் இணைத்துள்ளார். இந்த விமான ஓடுதளம், சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள பெரும் செல்வந்தர்கள் தங்கள் சொந்த விமானத்தை பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்டது. இதன் மூலமாக சில வேலை வாய்ப்புகளும், உற்பத்தியும் உருவாகியுள்ளது உண்மையே. ஆனால், இவை அனைத்தையும் வாடகைக்கு விட்டு, அடானி செல்வந்தராகியுள்ளார்.
அடானி குழுமம் 1988-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு 1994-ம் ஆண்டு, பங்குச்சந்தையில் பங்கு வெளியீடு செய்தது. ஆனால் இதன் உண்மையான வளர்ச்சி, மோடி குஜராத்தின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகே நிகழ்ந்தது. 2002-ம் ஆண்டு முதல், இந்த மார்ச் வரையில், அடானி நிறுவனம், 765 மில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து 8.8 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள நிறுவனமாக வளர்ந்தது. இந்த காலகட்டத்தில் அடானி நிறுவனம், சிறப்பு பொருளாதார மண்டலத்தை கட்டியது, இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கங்களை வாங்கி அதன் முலம், இந்தியாவில் உள்ள அதன் அனல்மின் நிலையத்துக்கு தொடர்ந்து நிலக்கரி கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்தது அடானி நிறுவனம். இதன் மூலம், ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலக்கரி இறக்குமதி நிலையத்தை முந்த்ராவில் உருவாக்கியது அடானி. 2011-ம் ஆண்டில் அடானி நிறுவனம், ஆஸ்திரேலியாவில் க்வீன்ஸ் லேன்ட் என்ற இடத்தில் அப்பாட் பாயின்ட் என்ற நிலக்கரித் தளத்தை வாங்கியது. அதே நேரத்தில் 2011ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 13 பில்லியன் டாலர் அளவுக்கு கடனையும் இந்த காலகட்டத்தில் சமாளித்தது.
கட்ச் பகுதியிலும், குஜராத்தின் மற்றப் பகுதிகளிலும் அடானிக்கு அள்ளிக் கொடுக்கப்பட்ட சலுகைகளைப் போல வேறு எந்த நிறுவனத்திற்கும் கொடுக்கப்படவில்லை. அடானி அனுபவித்ததைப்போல் வேறு நிறுவனம் அனுபவிக்கவில்லை. ஒரு சில தனியார் நிறுவனங்களுக்கும் மோடி சில சலுகைகளைச் செய்துள்ளார். தற்போது நடந்துவரும் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி ஏழைகள் குறித்தும், ஏகபோக முதலாளித்துவம் குறித்தும் ஏராளமாக பேசலாம். ஆனால், இந்தியாவின் மற்ற பகுதிகளில் உள்ள நடைமுறைகளை ஒப்பிடுகையில் குஜராத்தில்தான் சுற்றுச் சூழல் பாதிப்பும் மற்றும் பெரும்பகுதி ஏழைகளே வாழும் கிராமங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். குஜராத்தில் சமீபத்தில் நடந்த ஒரு பேரணியில் பேசிய மோடி, அவரை கிராமத்தினரின் நண்பன் என்றும், அவர்களுக்கு எப்போதும் துணை நிற்பேன் என்றும் கூறினார். அரசுக் கருவூலத்தை கொள்ளையடிக்க ஒருவரையும் அனுமதிக்க மாட்டேன் என்று பேசினார்.
கட்ச் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களை சுற்றிப் பார்த்தால் முற்றிலும் மாறுபட்ட சித்திரம் விரிகிறது. அந்தப் பகுதி சப்போட்டாப் பழங்களுக்கு மிகவும் பிரசித்தி. இதைத் தவிர பேரீச்சம்பழம் போன்றவை அப்பகுதியில் ஏராளமாக விளையும். ஆனால், தற்போது அது காலாவதியாகி விட்டது. அடானி மற்றும் டாடா மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வரும் சாம்பலும், உப்பு நீரும், அந்த மண்ணை பாழாக்கி விட்டது என்கின்றனர் விவசாயிகள். அந்தப் பகுதியில் எங்கிருந்து பார்த்தாலும் இரண்டு தொழிற்சாலைகளின் சிம்னிகள் தெரிகின்றன. நவினால் கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான விவசாயி கஜேந்திர சிங் ஜடேஜா, குஜராத் அரசு 9,30,770 சதுர மீட்டர் மேய்ச்சல் நிலங்களை கையகப்படுத்தி அடானி சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு வழங்கியதாக கூறுகிறார். அடானி நிறுவனத்துக்கு அந்த நிலம் 10 ரூபாய்க்கும் குறைவாக வழங்கப்பட்டது.
சிறிது தூரம் சென்றதும் வறண்ட நிலத்தை காண்பித்த ஜடேஜா, மண் வளம் குறைந்த பிறகு, பருத்தி, கம்பு மற்றும் ஆமணக்கு பயிரிட்டு வருவதாகக் கூறினார். அந்த நிலத்தில் ஆங்காங்கே உப்புத் திட்டுக்கள் தென்பட்டன. உப்பு நீர், இந்த மண்ணை முழுமையாக பாழ்படுத்தி விட்டது என்று கூறிய ஜடேஜா, விவசாயம் செய்வது எந்த பயனையும் தராது என்று வெறுப்போடு கூறினார்.
மற்றொரு புறம் இருந்த ஆமணக்கு செடிகளைக் காண்பித்த ஜடேஜா, ஒரு காலத்தில் பச்சைப் பசேலென்று செழிப்பாக இருந்த பூமி என்று கூறினார்
15 ஆயிரம் மக்களைக் கொண்ட ஸராபரா கிராமம் அந்தப் பகுதியில் ஒரு பெரிய கிராமம். அந்தப் பகுதிக்கு சொந்தமான மேய்ச்சல் நிலங்களை ஒரு மீட்டர் 10 ரூபாய்க்கும் குறைவாக வழங்கப்பட்டதை எதிர்த்து, குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. குஜராத் உயர்நீதிமன்றம், கையப்படுத்தப்பட்ட நிலங்களை கிராமத்தினரிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று குஜராத் அரசுக்கும், அடானி நிறுவனத்துக்கும் 2011-ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவு அமல்படுத்தப்படவேயில்லை.
ஏழைப் பங்காளர்களுடன் மோடி
ஸராபரா கிராமம் சப்போட்டா பழங்களுக்கு பெயர் போனது. அந்தப் பகுதியில் வசிக்கும் அரான் கடாவி என்பவர், சீசன் சமயங்களில் ஒரு நாளைக்கு 5 லாரிகள் நிறைய சப்போட்டா இந்தப் பகுதியிலிருந்து சந்தைக்கு செல்லும் என்று கூறுகிறார். அடானி மின் உற்பத்தி நிலையத்தின் அமைந்து இருக்கும் பகுதிக்கு அருகில், தனது நிலத்தை வைத்திருக்கும் கடாவி, தற்போது ஒரு வேன் அளவுக்குத்தான் சப்போட்டா விளைகிறது என்கிறார்.
அந்தத் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் உப்பு நீரும், பறக்கும் சாம்பலும், நிலத்தடி நீரை பாழ்படுத்தி, மண்ணின் வளத்தை நாசப்படுத்தியதால் விவசாயம் அழியும் நிலைக்கு ஆளாகியிருக்கிறது என்று கூறினார். இந்தச் செடிகளில் இருந்து வழியும் நீர் முன்பெல்லாம் மஞ்சளாக வடியும் என்றும், தற்போது கருப்பு நிறத்தில் வடிகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கிராமத்தினரின் வழக்கறிஞர் யாக்னிக், இதுபோல் அடிமாட்டு விலைக்கு நிலங்களை வழங்கியதன் மூலம், அரசுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியிருக்கிறார் மோடி. அரசுக்கு சொந்தமான மதிப்பு மிக்க இயற்கை வளங்களை மானிய விலையில் வழங்குவதன் மூலம் அரசுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியிருக்கிறார் மோடி. உரிய விலை அரசுக்கு கிடைத்திருந்தால், அதன் மூலம் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி, பல ஏற்றத்தாழ்வுகளை சரிக்கட்டியிருக்க முடியும். சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து கடைசியாக 2012-ம் ஆண்டு, மத்திய அரசு சுனிதா நாராயணன் என்பவர் தலைமையில் இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க உத்தரவிட்டது.
விசாரணையை நடத்திய சுனிதா நாராயண் மற்றும் அவரது குழுவினர், கிராமத்தினரின் குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பதை கண்டறிந்தது. அடானி சிறப்புப் பொருளாதார மண்டலம் பசுமையான காடுகளை அழித்து அந்த இடைவெளியை தொழிற்சாலைகளால் நிரப்பி உள்ளது. இப்போது தொழிற்சாலையிலிருந்து பறக்கும் சாம்பல் காரணமாக நிலத்தடி நீர் பாழ்பட்டு இருக்கிறது. கடலில் இருந்து மின் உற்பத்தி நிலையத்துக்காக உறிஞ்சப்படும் நீர், ஒரு இடத்தில் மொத்தமாக சேமிக்கப்பட்டு மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட பிறகு வெளியேற்றப்பட்டது. ஏக மொத்தமாக பசுமை விதிகள் மீறப்பட்டு உள்ளன.
கமிட்டி நடத்திய ஆய்வில், இப்பகுதி மண் பாழ்பட்டுக் கொண்டு வருகிறது என்பதும், நாளடைவில் மோசமாகும் என்றும் தெரிய வருகிறது. சுற்றுச் சூழல் தடையில்லா சான்று அளிக்கையில் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன.” என்று அளிக்கை அளித்தனர். அடானியின் மொத்தத் திட்ட மதிப்பான 37 மில்லியன் டாலர்களில் ஒரு சதவிகிதத்தை நிலத்தடி நீரை பாதுகாப்பதற்காக செலவிட வேண்டும் என்றும், பரிந்துரை செய்தது சுனிதா நாராயண் கமிட்டி. கடலில் இருந்து நீர் எடுக்கும் கால்வாயை மறு கட்டமைப்பு செய்ய வேண்டும் என்றும், புதிய கால்வாய் கட்டி, நிலத்தடி நீரை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் அந்தக் கமிட்டி பரிந்துரை செய்தது.
ஆனால் ஒரு வருடம் ஆகியும் அந்தப் பரிந்துரைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஆனால், சிறப்புப் பொருளாதார மண்டலத்தை 7350 ஹெக்டேரிலிருந்து 18 ஆயிரம் ஹெக்டேர்களுக்கு விரிவுபடுத்த அடானி திட்டமிட்டு வருகிறது.
இது தொடர்பாக அடானி நிறுவனத்துக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அடானி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், அனைத்து விதிகளும் முறையாக பின்பற்றப்பட்டு, அந்த நேரத்தில் இருந்த நில மதிப்பின் அடிப்படையில்தான் நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன என்று அப்போது தெரிவித்தார். "நிலத்தில் தொழிற்சாலை தொடங்கப்படுவதற்கு முன்பு இருந்த மதிப்பையும், தொழிற்சாலை தொடங்கிய பிறகு உள்ள மதிப்பையும் ஒப்பிடுவது சரியாக இருக்காது. ஒரு முதலீட்டாளர் முதலீடு செய்வதன் மூலம் மிகப் பெரிய ரிஸ்கை எடுக்கிறார். அவரது முதலீடு வெற்றி பெறவில்லையென்றால், அதன் பாதிப்பு அந்த முதலீட்டாளருக்கு மட்டுமே" என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் அடானி நிறுவனத்தினர், தண்ணீரில் உப்பு கலந்திருப்பது என்பது அந்தப் பகுதி நிலத்தின் தன்மையால் ஏற்பட்டது என்றும் மின் தொழிற்சாலையால் அந்த பாதிப்பு உருவாகவில்லை தெரிவித்தனர். மேலும் சாம்பல் பறக்காத வண்ணம் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்றும் தெரிவித்தனர். சுனிதா நாராயண் குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நிராகரித்த அடானி நிறுவனத்தினர், பெரிய தொழிற்சாலைகளை நிர்மாணிக்கும் போது சுற்றுச் சூழலுக்குச் சில பாதிப்புகள் வரத்தான் செய்யும், அதை பொருட்படுத்தக்கூடாது. அந்தத் தொழிற்சாலையால் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த வளர்ச்சியைத்தான் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தனர். மேலும், அரசு விதித்த அத்தனை நிபந்தனைகளும் பின்பற்றப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
பேட்டி வேண்டும் என்றும், குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் வேண்டும் என்றும், மோடி அரசுக்கு மீண்டும் மீண்டும் அனுப்பிய கோரிக்கைகளுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.
இன்றைய தாராளமய பொருளாதாரச் சூழலில், தனியார் நிறுவனங்களுக்கு, அதுவும் சக்திவாய்ந்த தனியார் நிறுவனங்களுக்கு அரசு சலுகைகளை வாரி வழங்குவது ஒன்றும் வினோதமானது அல்ல. ஏற்கனவே குறிப்பிட்டது போல, அடானி மட்டும் மோடியால் பலனடையவில்லை. மேலும் சில நிறுவனங்களும் அடைந்துள்ளன. ஆனால், அதில் உள்ள விசித்திரம் என்னவென்றால், டென்டர் கூட விடப்படாமல், மொத்தமாக அடானிக்கு ஏகபோகத்தை வழங்குவதுதான் பிரச்சினையை ஏற்படுத்துகிறது என்கிறார் மின்ட் செய்தித்தாளில் கட்டுரை எழுதும் ஆகார் படேல்.
டாடாவின் 4000 மெகாவாட் மின் உற்பத்தி நிலையமும் கிட்டத்தட்ட இதே பாதிப்புகளைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது. மார்ச் 2012-ல், மத்திய அரசுத் திட்டத்தின்படி திறக்கப்பட்ட இந்த மின் உற்பத்தி நிலையம், மாநில அரசால் ஒதுக்கப்பட்ட நிலத்தில்தான் அமைந்தது. பெரிய மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்க மத்திய அரசு எடுத்த முயற்சிகளின்படி முதலில் திறக்கப்பட்ட நிலையம் இதுதான். தகடி கிராமம் கட்ச் மாகாணத்தில், டாடா ஆலையிலிருந்து நீர் வெளியேறும் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் 43 வயதான உமர் ஜாம் ஒரு மீனவர். அவர் இந்தப் பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில மாதங்களில் மட்டும் 60 சதவிகிதம் மீன்கள் இந்தக் கடல் பகுதியில் குறைந்துள்ளன என்கிறார் உமர் ஜாம். கடலில் இருந்து டாடா ஆலை தண்ணீரை ராட்சத குழாய்கள் மூலம் உள்ளே இழுப்பதால் சிறு மீன்கள் முற்றிலும் அழிந்துவிட்டது. மேலும், டாடா ஆலையிலிருந்து வெளியேறும் சூடான தண்ணீர் மீன் மற்றும் கடல் வாழ் உயிரினங்களை கொன்றுவிடுகிறது என்கிறார் அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர் தொழிற்சங்கப் பிரதிநிதி.
ஆறு பேரை குடும்ப உறுப்பினர்களாகக் கொண்ட உமர் ஜாம், மீன்பிடிக் காலம் தொடங்குவதற்கு முன்பாக, தன் வலைகளை தைக்கவும், படகை சரி செய்யவும், 2000 டாலர்களை கடனாகப் பெற்றிருந்தார். மீன்பிடிக் காலத்திற்குப் பின், கடனை அடைத்தது போக ஆண்டுக்கு 750 டாலர்களை சேமிக்க முடியும் என்று கூறிய ஜாம், இனி அது போல சேமிக்க வாய்ப்பில்லை என்கிறார். தற்போது 350 டாலர்களைக் கூட திருப்பிச் செலுத்த முடியுமா என்பது சந்தேகமாக உள்ளது என்கிறார். தனது வீட்டின் வெளியே மூங்கில்களால் கட்டப்பட்டிருந்த வேலி முழுக்க மீன்கள் உலர வைக்கப்பட்டிருக்கும் என்று கூறும் ஜாம், தற்போது அதில் கால் வாசி மீன்கள் கூட காய வைக்க முடிவதில்லை என்று சுட்டிக் காட்டுகிறார்.
மின்னஞ்சல் மூலமாக இது குறித்து பதிலளித்த டாடா நிறுவனம், 4.5 மைல்களுக்கு கற்களால் ஆன கால்வாய் கட்டப்பட்டிருப்பதாகவும், கொதிநீர் அதன் வழியாக ஓடி கடலில் கலப்பதற்குள் குளிர்ந்து விடும் என்றும், அதன் மூலம், சுற்றுச் சூழல் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்றும் கூறினர். மேலும், தகடி மீனவர்களுக்கு சிறந்த முறையில் மீன் பிடிப்பதற்கு வலைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், சுத்தமான குடிநீர் வழங்கவும் டாடா நிறுவனம் எற்பாடு செய்துள்ளது என்றும் கூறினார்.
அடானியின் சிறப்புப் பொருளாதார மண்டலம் தற்போது சட்டச் சிக்கலில் உள்ளது. நாவினால் கிராமத்தைச் சேர்ந்தவர்களும், அதன் தலைவர் ஜடேஜாவும், 2011-ல் இதற்கு எதிராக குஜராத் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். ஜனவரி மாதத்தில் நீதிமன்றம், அந்த சிறப்பு பொருளாதார மண்டலம் சட்ட விரோதமானது என்றும், அங்கே செயல்படும் தொழிற்சாலைகள் உடனடியாக வேலைகளை நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதற்கு காரணம், சுற்றுச் சூழல் தடையில்லாச் சான்று பெறாமலே அந்தச் சிறப்பு பொருளாதார மண்டலம் செயல்படத் தொடங்கியுள்ளது. இந்திய சுற்றுச்சூழல் சட்ட திட்டங்களின்படி, சுற்றுச் சூழல் தடையில்லாச் சான்று பெறாமல் ஒரு கல்லைக் கூட நட்டு வைக்க முடியாது. இதன் காரணமாகத்தான் தற்போது அடானியின் சிறப்பு பொருளாதார மண்டலம் சட்டச் சிக்கலில் மாட்டி உள்ளது.
ஆனால், பல நூறு மில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட்ட அடானி சிறப்பு பொருளாதார மண்டலம், இனி நிறுத்தவே முடியாத அளவுக்கு கை மீறிப் போய் விட்டதோ என்ற நிலைமையும் உருவாகி உள்ளது. குஜராத் உயர்நீதிமன்றம், கட்டி முடிக்கப்பட்ட பிறகு சுற்றுச் சூழல் தடையில்லா சான்று வழங்கலாமா? என்று மத்திய அரசை கேட்டது. மத்திய அரசு, இது குறித்து ஆலோசித்து சொல்வதாக பதில் கூறியுள்ளது.
பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 7-ல் தொடங்க உள்ள நிலையில், மத்திய அரசும் இது குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில் உள்ளது. இதன் காரணமாக, அடுத்து வரும் மத்திய அரசு இது குறித்து முடிவெடுக்க வேண்டும். அந்த அரசு மோடியின் அரசாகவும் இருக்கலாம்.
கட்டுரையாளர் : மேகா பாஹ்ரி
நன்றி : ஃபோர்ப்ஸ் ஏசியா இதழ்